உலக ஆட்டிசம் தினத்தையொட்டி பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் சிறப்பு குழைந்தகளை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.
ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆட்டிசம் பாதிப்பை பற்றி விழிப்புணர்வு வீடியோ பதிவை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், ”குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பை ஆட்டிசம் ஸ்பெக்ட்றம் கோளாறுகள் என்று கூறுவோம். 1% சதவீதத்திற்கான குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முக்கிய பிரச்னைகளாக, ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்யும் நடத்தை, சிந்தனை, சமூக தொடர்பு குறைப்பாடுகள் மற்றும் இயல்புக்கு மாறான நடத்தை போன்றவைகள் இருக்கும்.
அதுமட்டும் அல்லாமல் இந்த குழந்தைகள் நேருக்கு நேர் கண்ணை பார்க்கமாட்டார்கள், சிரிக்கமாட்டார்கள், அந்த வயதுக்குரிய மழலைச் சப்தங்களை செய்யமாட்டார்கள், அப்படியே பேசினாலும் ஒரே சொல்லைத் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பார்கள். மேலும், இவர்களுக்கு மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட கடினமாக இருக்கும். இன்னொரு முக்கிய குறைபாடாக ஒரு குறிப்பிட்ட பொருளையோ அல்லது நபரையோ சுட்டிக் காட்டி கேட்க கூடிய திறன் இந்த குழந்தைகளுக்கு இருக்காது.
குழந்தைகளை பெற்றோர்கள் அல்லது குடும்பத்தினர்கள் கண்காணிப்பதன் மூலம் இந்த குறைபாடுகளை அறிந்து, அதற்கான தகுந்த சிகிச்சைகளை தரலாம். எந்த ஒரு குறிப்பிட்ட சிகிச்சை இல்லையென்றாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சாதாரண குழந்தைகள் போல் மாற்றலாம்.
அதற்கான சில சிகிச்சைகள் மற்றும் சிறப்பு கல்விகளாக அந்த குழந்தைகளுக்கு எப்படி பேச வேண்டும், சமூகத்திடம் எப்படி ஒட்டி நடக்க வேண்டும், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான திறன் பயிற்சிகள், எப்படி ஒரு நபரை நேருக்கு நேர் பார்க்க வேண்டும் என்றும் உடலியல், பேச்சு, உடற்பயிற்சி மற்றும் வளர்ச்சி சிகிச்சைகள் மூலம் சொல்லி தரலாம். இந்த சிகிச்சைகளை குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடரச்சியாக எடுத்து கொள்ள வேண்டும். இந்த சிகிச்சைகள் அரசு மருத்துவமனை கல்லூரிகள், குழந்தைளுக்கான சிறப்பு பிரிவுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அளிக்கப்படுகிறது.”
மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ஒரு லட்சம் வரை இதற்கு தேவையான எல்லா சிகிச்சைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் தேவைபடுபவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சாதாரண நடைமுறையில் வித்தியாசமாக இருந்தாலும் அறிவுதிறன் பொறுத்த வரையில் சாதாரணமாகவும் அல்லது கூடுதல் அறிவுதிறன் உடையவர்களாகவும் இருப்பார்கள். இந்த குழந்தைகளின் தனித்திறனை கண்டறிந்து, அதற்கான தகுந்த பயிற்சி கொடுத்து பொறுமையாகவும், விழிப்புணர்வோடும் மற்றும் ஒரு புரிதலோடும் வளர்த்தால், இந்த குழந்தைகளை சாதாரண குழந்தைகள் மட்டுமல்லாமல் சாதனை குழந்தைகளாகவும் மாற்றலாம் என்று அந்த வீடியோ பதிவில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்