ஆளுநர் ஒப்புதலுக்கு பின் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள். இந்த விவகாரத்தில் அதிமுகவினருக்கு ஏன் திடீர் பாசம்..? என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
நீண்டநாள் சிறைவாசிகள் விடுதலை செய்வது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக, அதிமுக, மதிமுக, மமக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு கவன் ஈர்ப்பு தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், சிறைத்தண்டனை என்பது சீர்திருத்தத்திற்காக கொடுக்கப்படக்கூடியது “சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் அனுப்பிய கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என கூறப்படுகிறது. ஆளுநர் எப்போது கையெழுத்திடுவார் என்பது தெரியாத புதிர்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணையால் விடுதலை தடைபட்டுள்ளது. 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என பல்வேறு இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 20-25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியாதவது:
9 பேர் தங்களது கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள். அந்த கருத்துக்களுக்கு எந்தவித மாறுபாடும் வேறுபாடும் சொல்ல தயாராக இல்லை. இந்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம் .
தமிழ்நாடு சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வயது முதிர்ந்த, தீராத நோயுற்ற, மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் தொடர்பாக நீதிபதி ஆதிநாதன் தலைமையில் குழு
22.12.2022 அன்று அமைக்கப்பட்டது. வழக்குகளை ஆராய்ந்து முன் விடுதலைக்காக இந்த குழு அமைக்கப்பட்டது. முன்விடுதலைக்கு 262 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். ஆளுநர் உத்தரவு பிறப்பித்தவுடன் அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள்.
அண்ணாவின் 113-வது பிறந்தநாளில் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து முன் விடுதலை செய்தோம். அறிவுரை கழகம் மூலம் 14 ஆயுள் தண்டனை கைதிகள் உட்பட பலர் விடுதலை. 566 ஆயுள் தண்டனை கைதிகளின் முன் நேர்வுகள் பரிசீலிக்கப்பட்டு 332 கைதிகள் இதுவரை முன்விடுதலை செய்யப்பட்டனர் , இவர்களில் 9 சிறைவாசிகள் இஸ்லாமியர்கள்.
இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை என்ற தோற்றத்தை அதிமுகவினர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள், அது போலியானது. எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையுடன் பேசினார். 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்தற்கு என்ன காரணம்?
தருமபுரியில் பேருந்தை எரித்தவர்களை முன்விடுதலை செய்த உங்கள் ஆட்சி, இஸ்லாமிய சிறைவாசிகளை ஏன் விடுதலை செய்யவில்லை? திடீர் பாசம் ஏன்? என அனைவருக்கும் தெரியும். ராஜீவ் காந்தி வழக்கில் 7 பேர் விடுதலைக்கு அதிமுக அரசு போரட்டம் நடத்தியது. திமுக ஆட்சியில் தாம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அடக்கத்தோடு நான் கேட்க விரும்புகிற கேள்வி. அதிமுக ஆட்சியில் இருந்த போது இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அ.தி.மு.க., இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன் என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும் “ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.