புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகள், இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காகப் புதுச்சேரி சிறைத்துறை, அரவிந்தர் சொசைட்டி என்ற சமூக அமைப்புடன் இணைந்து கைதிகளுக்குக் கைவினைப் பொருட்கள் செய்தல், யோகா போன்ற பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும் விடுதலை செய்யப்பட்டு வெளியே செல்லும் போது அவர்கள் சொந்த தொழில் செய்யும் வகையிலும் புதிய திட்டத்தை சிறைத்துறை கொண்டு வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி சிறைச்சாலை வளாகத்திலுள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் கைதிகள் ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை அமைத்து அண்ணாச்சி, வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இது ஒருங்கிணைந்த விவசாய பண்ணை என்பதால், அங்கு ஆடு, மாடு, கோழி, முயல் ஆகியவற்றையும் வளர்த்து வருகின்றனர். விவசாயப் பணியில் ஈடுபடும் தண்டனைக் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் விவசாயப் பொருட்களை, புதுச்சேரி சந்தைகளில் விற்பனை செய்ய சிறைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கைதிகளின் இந்த விவசாயப் பணிகளை வருகின்ற 14ஆம் தேதியன்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்க உள்ளார்.