தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் குறித்து தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், “விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கு மின்னணு ஏல முறை அறிமுகம் செய்தல், ஒரு மாவட்டம்- ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையின்படி, உற்பத்தியை உயர்த்தி, அதற்கான மதிப்புக்கூட்டும் தொழிற்சாலைகளை உருவாக்குதல்.” போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், படித்த இளைஞர்களை வேளாண்மையில் ஈடுபடுத்தி, வேளாண் தொழில் முனைவோர்களாக உருவாக்குதல், போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும், செயல்படாமல் இருக்கும் உழவர் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இயற்கை விவசாய முறையினை பிரபலப்படுத்துதலில் தனிக்கவனம் செலுத்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.








