பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கும் என நடிகர் ஜெயம்ரம் கூறினார்.
மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. லைகா புரொடக்சன்ஸ் – மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஷோபிதா, ஐஷ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட மிகப் பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனிடையே கடந்த 20ம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடல், யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். மேலும் படத்தில் நடித்த ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், குஷ்பு உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஜெயம்ரவி, பொன்னியின் செல்வன் முதல்பாகத்திற்கு எல்லாரும் கொடுத்த வரவேற்பை விட இதற்கு அதிகமாக எதிர்பார்க்கிறோம். இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் போது உணர்ச்சிகரமாக ஆரம்பிக்கும்.
ஆரம்பித்தவுடன் க்ளைமாக்ஸ் என்ற நினைப்புக்கு உங்களை இந்த படம் கொண்டு சேர்க்கும். உங்களை போல இந்த படத்தை நாங்களும் எதிர்பார்க்கிறோம். இந்த படத்தில் எல்லாருக்கும் சம பங்கு இருக்கும். இந்த ஆண்டில் எனக்கு 4 படங்கள் வெளியாக உள்ளது என்று கூறினார்.







