28.9 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

களைகட்டும் காணும் பொங்கல்: சென்னையில் பாதுகாப்பு பணியில் 15,000 காவல்துறையினர்

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கடைசி நாளான இன்று காணும் பொங்கல் தமிழ்நாடு முழுவது கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் தைப்பொங்கல், இரண்டாம் நாள் மாட்டு பொங்கல், தை மாதத்தின் மூன்றாம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழாவாகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் ஆகியவை அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த நாளில் இடம் பெறும்.

இது தவிர உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல்.

அப்படிப்பட்ட சிறப்புகளை கொண்ட இந்த காணும் பொங்கல் பண்டிகையையொட்டி பூங்காக்கள், கடற்கரை, வணிக வளாகங்கள் போன்ற இடங்களுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால் அந்த இடங்களில் எல்லாம் பாதுகாப்பது ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் எந்தவித சிரமும் இன்றி எல்லா இடங்களுக்கும் பயணம் செய்ய ஏதுவாக காணும் பொங்கலை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அண்ணா சதுக்கும், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், பெசன்ட் நகர் கடற்கரை , குயின்ஸ்லாந்து ஆகிய இடங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக பராமரிப்பு காரணங்களுக்காக வாரந்தோறும் விடுமுறை விடப்படும், வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை காணும் பொங்கலை முன்னிட்டு செவ்வாய்க்கிழமையான இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்காக்களில் எல்லாம் காலை 8 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோத துவங்கியது.

அதேபோல் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையிலும் காணும் பொங்கல் மீண்டும் களை கட்டியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் காலை முதலே தங்கள் குடும்பத்தினரோடு வந்து குவியத்தொடங்கியுள்ளனர். இதேபோல் சென்னையில் புகழ் பெற்ற வணிக வளாகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்தினரோடு சென்று பொழுதுபோக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் சென்னையில் பொதுமக்கள் அதிகள் கூடும் சுற்றுலா இடங்களில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கூடுதல் காவல்துறை ஆணையர்கள் அறிவுரைகள், இணை ஆணையர்கள் ஆலோசனைகளின் பேரில் துணை ஆணையர்கள் மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் , காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என மொத்தம் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலையிலும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மணற்பரப்பிலும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உதவியாக 1,000 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading