வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, 10 குழுக்கள் அமைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மர்ம நபர்கள் மலம் கலந்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அங்கு மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆய்வின் போது, அங்குள்ள தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை கடைபிடிக்கப்பட்டு வருவதும், கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
தொடர்ந்து கடந்த ஜனவரி 14ஆம் தேதி, வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும், வேங்கைவயல் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணைக்காக 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 35 சிபிசிஐடி போலீசார் இன்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர்.








