“நான் நினைத்ததை பிரதமர் நரேந்திர மோடி தவறு என்று நிரூபித்துவிட்டார்” என குடியரசுத் தலைவரிடம் பத்மஸ்ரீ விருதுபெற்ற கர்நாடக கைவினை கலைஞர் ரஷீத் அகமது குவாத்ரி கூறினார்.
இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது 106 பேருக்கு குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. அவர்களில் 52 பேருக்கு பத்ம விருதுகள் குடியரசுத் தலைவரால் நேற்று முன்தினம் வழங்கப்பட்டன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மறைந்த சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவரான முலாயம்சிங் யாதவிற்கான பத்மபூஷண் விருதை அவரது மகன் அகிலேஷ் யாதவ் பெற்றுக் கொண்டார். மேலும் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கர்நாடகாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பிட்ரி கைவினை கலைஞரான ரஷித் அகமது காத்ரி, பத்மஸ்ரீவிருதினைப் பெற்றார். விருது பெறும் விழா நிறைவு பெற்றதும், விருதாளர்களுடன் பிரதமர் மோடி சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பிரதமருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விருதாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பிரதமரிடம் பேசிய குவாத்ரி, ஐக்கிய முற்போக்கு கட்சி ஆட்சியில் எனக்கு பத்மவிருது கிடைக்கும் என்று எதிர்ப்பாத்தேன். பாஜக ஆட்சியில் எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது என்று கருதினேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்று நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள். நான் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.
அவர் கூறியதைக் கேட்டுக்கொண்ட பிரதமர் மோடி, புன்னகையுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஷித் அகமது குவாத்ரி, ”இந்த விருதைப் பெற நான் 10 ஆண்டுகள் முயற்சி செய்தேன். பாஜக ஆட்சிக்கு வந்ததும், முஸ்லிம்களுக்கு இந்த அரசு எந்த விருதையும் வழங்காது என எண்ணினேன். நான் நினைத்தது தவறு என பிரதமர் மோடி நிரூபித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.







