தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையைப் பொறுத்து, எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு பிறகு இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதத்திற்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஜூன் மாதம் 95.99 ரூபாய்க்கு விற்பனையான பெட்ரோல் விலை, அதன்பிறகு படிப்படியாக ஒரே மாதத்தில் 5 ரூபாய் வரை உயர்ந்தது. சமீப நாட்களாக 100 ரூபாயை தொட்டு விற்பனையான பெட்ரோல் விலை, இன்று 100 ரூபாயை கடந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100.13 காசுகளுக்கு விற்பனையாகிறது. எனினும், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் 93.72 காசுகளுக்கே விற்பனையாகி வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே அவதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.







