அம்மைநாயக்கனூரில் கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு சண்டை போட்டி நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல்…

திண்டுக்கல் மாவட்டம் அம்மை நாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு சண்டை போட்டி நடத்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஹரன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் கிராமத்தில் வருடம் தோறும் கிடா முட்டு போட்டி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 18 ம் தேதி கிடா முட்டு போட்டி நடத்துவது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. எனவே, அம்மைநாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திண்டுக்கல், அம்மைநாயக்கனூர் கிராமத்தில் கிடா முட்டு போட்டி நடத்துவது தொடர்பாக அம்மைநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் அனுமதி வழங்க வேண்டும் எனவும் கிடா முட்டு போட்டி நடத்துவதற்கு வழிமுறை வகுத்தும் உத்தரவிட்டார்.

மேலும், அம்மைநாயக்கனூர் கிராமத்தில் நடைபெறும் கிடா முட்டு போட்டியை காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் காயமடைந்த ஆடுகளை போட்டிக்கு அனுமதிக்க கூடாது மேலும் ஆடுகளுக்கு மது, போதை பொருட்கள் கொடுக்க கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

அண்மைச் செய்தி : கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்– மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதலமைச்சர்

மேலும். ஆடுகளின் கொம்புகளில் விஷம் தடவி இருக்கிறதா என்பது குறித்து கால்நடை மருத்துவர் ஆய்வு மேற்கொண்ட பிறகு போட்டிக்கு அனுமதிக்க வேண்டும். காவல்துறை பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான செலவுகளையும் போட்டி நடத்தும் நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கிடா முட்டு போட்டியில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் போட்டி நடத்தும்  நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காவல்துறை அதிகாரிகள் தேவையான நிபந்தனையும் வகுத்துக் கொள்ளலாம். மேற்கண்ட அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றப்படும் என மனுதாரர்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு கிடா முட்டி போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.