அண்ணாமலையின் தைரியமான பேச்சும், வேகமான செயல்பாடும் எப்போதும் என்னை ஈர்க்கக் கூடியவை என்று எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் பாஜக மகளிரணி சார்பில் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர்களைச் சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது அவர் கூறுகையில், “வடமாநில தொழிலாளர்கள் ஊருக்கு கிளம்பிச் செல்வதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பல்வேறு துறைகளில் இந்தப் பிரச்னை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த சிறு சிறு பிரச்னைகளை சரிசெய்யாமல் விட்ட முதல்வரின் கையாளாகாதத் தன்மையின் விளைவே இந்த நிலைக்கு காரணம். தேசிய ஜனநாயகக் கூட்டணி 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலை வலுவாக சந்தித்தது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியைப் பெற முடியாவிட்டாலும், சட்டமன்றத் தேர்தலில் கணிசமான வெற்றியைப் பெற்ற எதிர்க்கட்சி கூட்டணியாக உள்ளோம். ஒரு கட்சியின் கொள்கையை இன்னொரு கட்சி ஏற்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரத்தில் எதிரணியை வெற்றி பெற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். கடந்த சில நாள்களாக அதிமுக முக்கிய நிர்வாகிகள், எங்கள் கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் வெளியிடும் கருத்துகளால் பலருக்கு வருத்தம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் பாதிப்பை ஏற்படுத்தாது. இது பலமான கூட்டணி. அரசியலில் இங்கிருந்து அங்கு போவதும், அங்கிருந்து இங்கு வருவதும் இயல்புதான்.
இந்த சம்பவங்களால் ஏற்பட்ட காயத்தை வரக்கூடிய நாள்களில் சரி செய்ய வாய்ப்புள்ளது. சகோதரர் அண்ணாமலையின் தைரியமான பேச்சும், வேகமான செயல்பாடும் எப்போதும் என்னை ஈர்க்கக் கூடியவை. ஒவ்வொரு கட்சியிலும் இருக்கக் கூடிய தலைவர்களை போல, நானும் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன் என்றுதான் கூறியுள்ளார். திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள். முதலமைச்சர் எதிர்கட்சிகளை பார்த்து பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்துதான் பயப்பட வேண்டும்.” என்றார்.
-ம.பவித்ரா