அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் கட்சியில் இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் யார் கையெழுத்தும் இல்லை என்பதால் ஜூலை 11 பொதுக்குழு நோட்டீஸே செல்லாதது என தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், கட்சியின் இரு பதவிகளும் காலியாகி விட்டதால், நிர்வாகத்தில் எந்த வெற்றிடமும் ஏற்படாது எனவும், நிர்வாகத்தை கவனிக்க தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளனர் எனவும் விளக்கமளித்தனர்.
அனைத்து தரப்பினரின் விரிவான வாதங்களைக் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கின் தீர்ப்பை இன்று 9 மணிக்கு தள்ளிவைத்தார். பொதுக்குழு 9.15க்கு கூட இருந்த நிலையில் 9 மணிக்கு தீர்ப்பு வரும் என அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த கூடுதல் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
-ம.பவித்ரா