பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் சென்றனர். அப்போது, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உண்டானது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். பேனர்கள் கிழிக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தில் கதவு உடைக்கப்பட்டதால், அந்த பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான கே.பி.முனுசாமி, வானகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “விரக்தியின் உச்சியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வன்முறையை கையிலெடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என சாடினார்.
உச்சபட்ச அதிகாரம் படைத்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்த அவர், கடந்த முறை ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேடையில் இடம் வழங்கியது போன்று, இந்த முறையில் வழங்கப்பட்டுள்ளது. அவர் அதில் வந்து கட்சி விவகாரங்களை விவாதித்திருக்கலாம் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








