சென்னை மெரினா கடற்கரையில் முகக் கவசத்தை மறந்து சுற்றி திரியும் பொதுமக்களால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, கூடுதல் தளர்வுகளை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த அடிப்படையில் கடந்த 2 மாதங்களாக மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பணியிடங்களிலும், பொது இடங்களிலும் மக்கள் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று குறிப்பிடபட்டிருந்தது. தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் வந்தாலும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வரும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், வழக்கத்தை விட அதிகளவிலான பொதுமக்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மெரினா கடற்கரையில் நடைபயிற்சி, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர். முகக்கவசம் அணிவதை மறந்து, கும்பலாக கடற்கரையில் சுற்றித்திரியும் பொதுமக்களால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரையில் கூடும் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிவதை கண்காணிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடற்கரையில் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல், பட்டினப்பாக்கம் மீன் சந்தையிலும் இன்று கூட்டம் அலைமோதியது. முகக்கவசம் அணிந்தும், அணியாமலும் கூட்டம், கூட்டமாக அசைவ பிரியர்கள் மீன், இறால், கருவாடு போன்றவற்றை வாங்கி சென்றனர்.







