பெகாசஸ் விவகாரத்தில் மனுதாரர்கள் முதலில் நீதிமன்றம் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலும், உச்சநீதிமன்றம் கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி பத்திரிகையாளர் என்.ராம், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில், “இந்த விவகாரம் குறித்து மனுதாரர்கள் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு இங்கு பதிலளிக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம், வெளியில் அல்ல என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “யஸ்வந்த் சின்ஹா என்ற மனுதாரரை தவிர பிற தரப்பினரிடமிருந்து வழக்கு தொடர்பான மனுக்கள் கிடைக்கப்பெற்றன. எனவே இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து உரிய விளக்கம் பெற வேண்டும் அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது எனவே வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.” என கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை திங்கட்கிழமை எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். அதேவேளையில், மனுதாரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலை தளத்திலோ, ஊடகத்திலோ விவாதிக்கிறீர்கள் என்றால் அது உங்களது விருப்பம் என்றும் ஆனால், மனுதாரர்கள் நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு இங்கு பதிலளிக்க வேண்டும் என்பதையே விரும்புகிறோம், வெளியில் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “நீதி கேட்டு வருகிறீர்கள் என்றால் முதலில் இந்த அமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நீதிமன்றத்தில் தெரிவிப்பதை ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இணையாக விவாதம் நடத்தாதீர்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.