அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விடப்படியாக உள்ளார். இதனை சிறிதும் ரசிக்காத அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் புது ரூட் எடுத்துள்ளதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சரும், துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்தியலிங்கத்தை ஒற்றை தலைமையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் சசிகலாவின் பங்கு என்ன ? அப்படி என்னதான் அதிமுகவில் நடக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கட்சியில் உள்ள சில விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டதோடு, அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவையடுத்து தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அதிமுகவில் அவைத்தலைவர் தலைமையில்தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும் கட்சி விதிமுறைகளில் ஒன்று. அதனால் அவரது பெயரிலேயே கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டது. அதற்காகதான் அவசர அவசரமாக அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அன்று முதல் இன்று வரை பொதுக்குழு கூட்டப்படவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே அதிமுகவின் உட்கட்சி தேர்தல் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டது. மெயின் பாடி (Main Body) என அழைக்கப்படும் வட்டம் முதல் மாவட்டச் செயலாளர் வரை முடிவு செய்யப்பட்டு விட்டனர். ஆனால் நியமன பொறுப்புகளான மற்ற அணிகளின் பொறுப்பாளர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் மே மாதம் மத்தியில் நடைபெறும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இது தற்போது தள்ளிக்கொண்ட போகிறது. இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தபோது, தமிழக அரசியலில் ஒற்றை தலைமை இருக்கும் கட்சிகளே ஆளுமையுடன் உள்ளன. எனவே அதேநிலை அதிமுகவில் ஒற்றைத்தலைமை வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக தெரிகிறது. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை எடுத்துவிட்டு தலைவர், செயல்தலைவர் பொறுப்புகளை கொண்டு வர வேண்டும் என எடப்பாடி தரப்பில் ஓபிஎஸ் அணியினருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முதலில் அதற்கு தயக்கம் காட்டிய ஓபிஎஸ் அணியினர், நீண்ட யோசனைக்கு பிறகு ஓகே சொல்லியுள்ளனர். ஆனால் ஒரு கண்டிஷன் அந்த தலைவர் பதவி நம்ம இரண்டு பேருக்குமே வேண்டாம். ஒரத்தநாடு ஆர் வைத்தியலிங்கத்தை தலைவராக அறிவித்து விடலாமா ? என வினவியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி, அடுத்த கட்டமாக தமது அணியினரை அழைத்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நீங்கள் ஏன் திமுக தலைவர் முக ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஊர் ஊராக நமக்கு நாமே பயணம் மேற்கொண்டதுபோல், நீங்களும் மேற்கொள்ள கூடாது என கேட்டுள்ளனர். அதுவே உங்களை ஒரு ஆளுமைக்கான இடத்தில் அமர வைக்கும் என ஆலோசனை கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் சில நகர்வுகளை எடப்பாடி தொடங்கியிருந்தாலும், டெல்டா முதல் கன்னியாகுமரி வரையுள்ள அதிமுக நிர்வாகிகளை எடப்பாடியின் இந்த முடிவினை ரசிப்பதாக தெரியவில்லை.
எடப்பாடி பழனிசாமி ஒரு கட்சியின் மூத்த தலைவர் போல் நடந்து கொள்ளாமல், ஒரு மண்டத்தின் செயலாளர் போல் நடந்து கொள்கிறார் என சசிகலாவை சந்தித்து ஒரு கூட்டம் புகார் வாசித்துள்ளனர். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட சசிகலா எனக்கு எந்த பதவியும் அதிமுகவில் வேண்டாம். ஒருவேளை எடப்பாடி தன்னைதானே தலைவராக அறிவித்துகொள்ள முயலும் பட்சத்தில் நாமும் ஓபிஎஸ்சின் விருப்பபடி வைத்தியலிங்கத்தை போட்டியாளராக களமிறக்குவோம். அதற்குரிய பணிகளை தொடங்குங்கள் என கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் சசிகலா. கொங்கு மண்டலம் மட்டுமே கட்சியல்ல என்பதை அவருக்கு நாம் புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அவர் கூறியதாக தென் மாவட்ட அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவரை நம்பி இவர்கள் எப்படிதான் செல்கின்றனரோ என எடப்பாடி ஆதரவாளர்கள் நடுநிலைமை வகிக்கும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் தூண்டில் போட்டு வருகின்றனர். சசிகலா கட்சிக்குள் கால் எடுத்து வைத்தால், பிரச்சனை நம் அனைவருக்கும்தான் என்பதை நாம் உணர வேண்டும் என அவர்கள் பேசி வருவதாக தெரிகிறது.
அதோடு மட்டுமில்லாமல், அதிமுகவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் ஒன்று தமது தேர்வாக இருக்க வேண்டும் என்றும், மற்றொன்றை நீங்கள் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என எடப்பாடியிடம் ஓபிஎஸ் கறாராக கூறிவிட்டாராம். எனவே திருச்சியில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதியை சார்ந்த நிர்வாகி ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என ஓபிஎஸை அவரது ஆதரவாளர்கள் நெருக்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க, வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டில் அதிமுக சரிவர சட்டம் இயற்றாதே, அச்சட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. இந்த அதிருப்தியை போக்க வட மாவட்டங்களில் இருந்து ஒருவரை ராஜ்யசபாவிற்கு அனுப்ப தலைமை முன்வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிகிறது.
இத்தனை பிரச்சனைகளையும் களைந்துவிட்டு, ஜூன் மாதம் பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத்தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளதாம். அதற்கு தகுந்தாற்போல், அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுக்க தொடங்கிவிட்டதாக தெரிகிறது. இப்போது நடைபெறும் அனைத்து கலகங்களையும் மத்தியில் ஆளும் பாஜக அமைதியுடன் பார்த்து வருகிறதாம். இதில் அவர்கள் யாரையும் சப்போர்ட் செய்ய வேண்டாம் என்ற முடிவில் உள்ளதாக தெரிகிறது.
இதில் வெற்றி யாருக்கு என்பதை விட, ஜெயலலிதாவால் மிகச் சிறப்பாக கொண்டுச் செல்லப்ட்ட அதிமுக என்ற கப்பல் தரை தட்டிவிடக்கூடாது என்பதே அதிமுகவின் உண்மை தொண்டனின் கவலையாக உள்ளது.
இராமானுஜம்.கி