பழனி கோயில் மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என புகார் – அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதம்

பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு…

பழனி முருகன் கோயிலில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால், மயக்கமடைந்த பெண் பக்தருக்கு சிகிச்சை அளிக்காமலேயே ஆம்புலன்சில் அனுப்பி வைத்ததால் பக்தர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த 24 வயதான நித்யா என்ற பெண் பக்தர் குடும்பத்துடன் சாமி கும்பிட வருகை தந்தார்‌. 5 மாத கர்ப்பமாக உள்ள நித்யா மலைக்கோயில் மேல் பிரகாரத்தில் வரிசையில் நின்றிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மயக்கமடைந்தார்.
இதையடுத்து மயக்கமடைந்த அவரை உடனடியாக மலைக்கோயில் மேல்பிரகாரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை மின் இழுவை ரயில் மூலமாக அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர்.
அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில் நிலையத்திற்கு வந்தவுடன் அங்குள்ள மருத்துவமனையிலும் மருத்துவர் இல்லாத நிலையில், அங்கு தயாராக இருந்த பழனி கோயிலுக்கு சொந்தமான ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கர்ப்பிணி மயக்கம் அடைந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகியும் எவ்வித முதலுதவி சிகிச்சையும் செய்யாமல் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கோயில் ஆம்புலன்ஸிலும் ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் எதுவுமில்லாமல் இருந்தது.
இதனால் பக்தர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸை ஓட்டுவதற்கு ஓட்டுநர் இல்லாததால், அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்களில் ஒருவர் ஆம்புலன்ஸை ஓட்டி சென்றதும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில் மின் இழுவை ரயிலில் சென்ற மூதாட்டி ஒருவருக்கு இரும்புத்தகடு கிழித்து காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக கோயிலுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்ற போது அங்கும் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவம் பார்க்காமல் நீண்டநேரம் அமர்ந்திருந்தால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.


இதனால் ஆத்திரம் அடைந்த பக்தர்கள் பழனி கோயில் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் பழனி கோயிலில் உடல்நிலை காரணமாக பாதிக்கப்படும் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவலயான மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் அனைத்து வசதிகளும் உள்ள ஆம்புலன்ஸ், அதனை இயக்க ஓட்டுநர் வேண்டும் என வலியுறுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.