பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலகம் பார்க்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் உள்ள ஐ.நா. சபையில் இந்தியாவின் தலைமையில் உலக பயங்கரவாத தடுப்பு வழிமுறைகள் என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் ஐ.நா.சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது இந்தியாவே பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவரின் குற்றச்சாட்டுக்கு ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தான் சென்றிருந்த போது, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர்ரிடம் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.
“உங்கள் வீட்டிற்கு பின்னால் பாம்புகளை வைத்திருந்தால், அது உங்கள் அண்டை வீட்டுக்காரரை மட்டும் கடிக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது. மாறாக அதனை வைத்திருப்பவர்களையும் பாம்பு கடிக்கும். ஆனால், உங்களுக்கு தெரியும்…” என்று ஹிலாரி கிளிண்டன் கூறியதைக் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். என்றாலும் இதுபோன்ற சிறந்த அறிவுரைகளை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பாது என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
“எனது ஒரே அறிவுரை இதுதான். உங்கள் நடிப்பை தூக்கியெறியுங்கள். தயவு செய்து நல்ல அண்டை நாடாக இருக்க முயலுங்கள். இன்று உலகின் மற்ற நாடுகள் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு போன்றவற்றுக்காக முயற்சித்து வருவது போல நீங்களும் முயலுங்கள்” என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.