பிரேதப் பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு

அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவக் கல்லூரிகளில்…

அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவக் கல்லூரிகளில் ஜூலை 18,19,20 ஆகிய 3 நாட்களில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அரசு மருத்துவமனைகளில் பிரேதப் பரிசோதனைகள் நடக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய 3 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர்.

பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் துப்புரவுப் பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே பிரேதப் பரிசோதனை செய்கின்றனர். ஆனால், மருத்துவர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கையளிக்கின்றனர். ஆகவே, பிரேதப் பரிசோதனை அறைகளில் வீடியோ பதிவு செய்ய வேண்டுமெனக் கடந்த 2008ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரேதப் பரிசோதனைகள் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிணவறை மற்றும் பிரேதப் பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி காமிரா பொருத்திக் கண்காணிக்க வேண்டும். அவை எல்லா நேரமும் இயங்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதோடு, மதுரை திருநெல்வேலி சிவகங்கை ஆகிய 3 மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் பிரேதப் பரிசோதனையின் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் ஜூலை 4,5,6 ஆகிய தேதிகளின் வீடியோ பதிவைச் சமர்ப்பிக்க அறிவுறுத்திய நிலையில், 8,9,10 தேதிகளில் நடைபெற்ற வீடியோபதிவு சமர்ப்பிக்கப்பட்டது.

அண்மைச் செய்தி: ‘மயில் சிலை வழக்கு; 4 மாத கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!’

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், மருத்துவக் கல்லூரி பிரேதப் பரிசோதனை நிலையங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்துத் தெரிந்து கொள்வதற்காகத் திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவக் கல்லூரிகளில் ஜூலை 18, 19, 20 ஆகிய நாட்களில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.