ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட கனல் கண்ணனை 26ம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க நீதிபதி லக்ஷ்மி உத்தரவிட்டுள்ளார்.
இந்துக்கள் உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இந்து முன்னணி சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா சென்னை மதுரவாயல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், திரைப்பட சண்டை இயக்குநர் கனல் கண்ணன் பங்கேற்றுப் பேசினார். அப்போது, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே செல்லும் வழியில் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் சிலை உள்ளது. இந்த சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று கூறியிருந்தார். இவரது பேச்சு சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கனல் கண்ணனைக் கைது செய்யக் கோரி, சென்னை மாநகராக காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், பொது அமைதியைச் சீர்குலைத்தல் சட்டப்பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அவரை தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே, இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி கனல் கண்ணன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் கனல் கண்ணன் தங்கியிருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கனல் கண்ணனைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, கனல் கண்ணன் எழும்பூர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு 12வது அமர்வு நீதிபதி லக்ஷ்மி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி லக்ஷ்மி கனல் கண்ணனை 26-ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.








