அதிமுக சார்பில் இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவியை ஆளுக்கு ஒன்று என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் திமுக கூட்டணி 4 ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இதில் 3 வேட்பாளர்களை திமுக களமிறக்கியுள்ளது. ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , அதிமுகவில் இரண்டு ராஜ்ய சபா எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக ஒரு மீட்டிங், ரகசியமாக சில மீட்டிங்குகளை நடத்தியும் கூட அதிமுகவால் எம்பி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அதிமுக சார்பில் நிறுத்த வேண்டும் என எடப்பாடி விரும்புவதாக ரத்தத்தின் ரத்தங்கள் கூறுகின்றனர். இவருக்கு இப்போது சீட் கொடுத்தாலும், இவரது மகன் ஜெயவர்தன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலின்போது சீட் கேட்பார். அவர் ஏற்கனவே எம்பியாகவும் இருந்து வந்துள்ளார். எனவே அவரை தவிர வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்பது ஓபிஎஸின் எண்ணமாக உள்ளது எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், சத்தமில்லாமல், எடப்பாடி பழனிசாமியை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார். எனவே அதனை ஓபிஎஸ் விரும்பவில்லை எனத் தெரிகிறது.
மற்றொரு முன்னாள் அமைச்சரான சிவி சண்முகமும் தனக்கும் ராஜ்யசபா சீட் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இவரும் ஒரு வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக அறியப்பட்டவர். எனவே இவருக்கு சீட் கொடுப்பதையும் ஓபிஎஸ் எதிர்ப்பதாகவே தெரிகிறது. மேலும் இரண்டு சீட்டில் ஒன்றை நீங்கள் யாரை வேண்டுமென்றாலும், நிறுத்திக்கொள்ளுங்கள். மற்றொன்றில் என்னுடைய ஆதரவாளர்களை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பதை ஓபிஎஸ் ஓபனாகவே எடப்பாடியிடம் கூறிவிட்டாராம். முதலில் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி அவரது பிடிவாதத்தை பார்த்து வாயடைத்து போய்விட்டாராம். சரி இரண்டு சீட்டில் ஒன்றை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். மற்ற விவகாரங்களை பின்னர் பேசி தீர்த்து கொள்வோம் என ஓபிஎஸிடம் கூறிவிட்டாராம்.
ஓபிஎஸை பொறுத்தவரை, இதுநாள் வரை இருந்ததுபோல், அமைதியாக இருக்க விரும்பவில்லையாம். இனி எதிர்காலத்தில் அதிமுகவில் என்ன முடிவெடுத்தாலும் இருவரின் பங்கும் சரிவிகிதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வதே என முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ஒற்றைத்தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் ஓபிஎஸ் மிகவும் தெளிவாக இருக்கிறாராம். அதிமுகவில் உள்ள எல்லா கமிட்டிகளிலும், தமது ஆதரவாளர்களுக்கு சம பங்கு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தீவிரம் காட்டுவது என முடிவு செய்துள்ளாராம்.
தற்காலிகமாக இப்பிரச்சனைக்கு முடிவு ஏற்பட்டாலும், நிரந்த தீர்வு வர வேண்டும் என்பதே அதிமுகவின் அடிமட்ட தொண்டனின் விருப்பமாக உள்ளது. அதிமுக ராஜ்யசபா ரேசில் முந்துவது யார் என்பதை விரைவில் தெரிய வரும் என கண்சிமிட்டுகின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்.
இராமானுஜம்.கி