ஆன்லைன் மூலமாக போதைப் பொருள் விற்பனை செய்த கும்பலை சேர்ந்த10 பேரை சென்னை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
சென்னை பூக்கடை துணை ஆணையர் உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை காவல்துறையினர் தீவிர வாகன சோதனை ஈடுபடுவது வழக்கம். அவ்வாறு வாகன சோதனையில் ஈடுபடும்போது அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்களில் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமாக சுற்றி வரும் வாலிபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
அவர்களைப் பிடித்து விசாரிக்கையில் கல்லூரி மாணவர்களிடமிருந்து 3 கிராம் மெத்தப்டமைன் போதை பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை எனும் போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை என காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் கல்லூரி மாணவர்களிடையே
போதைப்பொருள் எவ்வாறு சிக்கியது என்பது குறித்து சென்னை காவல்துறை தீவிர
விசாரணையில் களம் இறங்கியது.
பூக்கடை துணை ஆணையர் உத்தரவில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் எவ்வாறு விநியோகிக்கப்படிகிறது என்பது குறித்து விசாரணையை தொடங்கினர். இப்படிப்பட்ட கல்லூரி மாணவர்களான சல்மான் ஷாகிர், சாய் சஞ்சய், முகமது நவ்ஃபிக் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் , சினிமாத் துறையைச் சேர்ந்த வளசரவாக்கத்தில் வசிக்கும் ஸியாத் என்பவர் மூலம் கிடைத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.
இரவு நேர பப்புகளில் கிடைத்த நட்பின் மூலம் இவர்கள் போதை பொருளை கைமாற்றிக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. நண்பர்கள் ஒன்று கூடி பணம் சேர்த்து வைத்து போதைப் பொருள் வாங்கி கூட்டாக போதை மயக்கத்திற்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டதும் தெரியவந்துள்ளது.
கிரெடிட் கார்ட், டெபிட் கார்டு பயன்படுத்தி போதைப்பொருளை பொடியாக்கி ஒரு கிராம்
மெத்தப்டமைன் அளவு போதைப் பொருளை பிரித்து அறிவியல் ஆராய்ச்சிக்கு பயன்படும்
உபகரணத்தை பயன்படுத்தி போதை புகையை சுவாசித்து போதை மயக்கமாவதாக பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த உபகரணம் ஆன்லைன் மூலமாக வாங்கி பயன்படுத்துவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த உபகரணத்தில் தண்ணீரையும், போதைப் பொருளையும் ஆவியாக்கி அந்தப் புகையை சுவாசிப்பதன் மூலம் 8 மணி நேரம் தூக்கம் இல்லாமல், வேலை செய்யும் அலுப்பு தெரியாமல் போதையில் இருக்கலாம் என கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த உபகரணம் வாங்குவதற்கு முன்பாக வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தி இந்த உபகரணத்தில் தானாக தயாரித்தும் பயன்படுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சினிமா துறையைச் சேர்ந்த சியாகத்திற்கு போதைப் பொருள் எவ்வாறு கிடைத்தது என்று தொடர் விசாரணை மேற்கொள்ளும் போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த மண்ணடியில் வசிக்கும் மஸ்தான் என்ற குருவி மூலம் போதைப் பொருள் கிடைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறிப்பாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் சங்கிலி போல் ஒருவருக்கொருவர் மூலமாக பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு தங்களுக்கு கிடைக்கும் போதை பொருளை வாங்கிய விலை விட அதிகமாக மற்றவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை எடுத்து தடிப்படை போலீசார் கொடைக்கானல் சென்று செல்போன் சிக்னல் மூலமாக குருவி வேலை பார்க்கும் மஸ்தான் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மஸ்தானிடம் நடத்திய விசாரணையில் வியாசர்பாடியில் அவர் தங்கி இருக்கும் உறவினர் பர்கத் அலி என்பவர் வீட்டிலும் ஒரு கிராம் மெத்தப்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறாக நீண்ட நாட்களாக போதை பொருள் விற்பனை செய்து கார் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்கப்பட்டதையும் போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர்.குறிப்பாக பர்கத் அலி துணி வியாபரம் செயதாலும், குருவி வேலை பார்க்கும் நபர்களிடம் அதிகம் பழக்கம் கொண்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
அதன் பின் போலீசார் தொடர்ந்து விசாரிக்கும் போது குருவியாக செயல்படும் நபர்கள் வட்டாரத்தில் இந்த போதை பொருள் அதிகம் கை மாறுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களுக்கு இடையேயான தொடர்பை ஜிபே, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை மற்றும் கால் அழைப்புகள் மூலம் போலீசார் துப்பு துலக்கி போதை பொருள் விற்பனை செய்பவர்களை அடுத்தடுத்து கைது செய்தனர். யார் மூலம் போதை
பொருள் கை மாறுகிறது என்ற தொடர்பை விசாரித்த போலீசார்,நிசார், நவீன்,சேக்
அப்துல்லா,அனீப் முகமது என்ற நான்கு பேரையும் கைது செய்தனர்.
மொத்தமாக பிடிபட்ட 10 பேரும் கல்லூரி மாணவர்கள் உட்பட ஒவ்வொருவரும் மெத்தப்டமைன் போதைக்கு அடிமையானவர்கள், தாங்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,அதிக விலைக்கு அடுத்தடுத்து விற்பனை செய்து கைமாற்றுகின்றனர். ஒவ்வொரு முறை கைமாறும் போது ஒரு கிராம் போதைப்பொருள் 800 முதல் 1000 ரூபாய் அதிகமாக விற்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போதைமட்டுமல்லாது பணமும் கிடைப்பதால் வேகமாக இந்த நெட்வொர்க் விரிவடைந்து வருவதாக போலிசார் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இவர்களுக்கு மொத்தமாக போதைப் பொருளை சப்ளை செய்யும் கும்பலின் தலைவன் யார் என்பதை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குருவிகள் மூலமாக துபாய், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வருகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை மண்ணடியில் ஆரம்பித்து ஆப்பிரிக்கா நாடு வரை செல்கிறது என போலீசார் தெரிவிக்கின்றனர்.17ஆம் தேதி வாகன சோதனையில் சிக்கிய கல்லூரி மாணவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் 10 நாட்களில் 10 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.விரைவில் போதை பொருள் கும்பல் தலைவனை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
– யாழன்







