ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணலி புதுநகரைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மனைவி பவானி (வயது 29). பிஎஸ்சி பட்டதாரியான இவர் கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பவானி கடந்த ஒரு வருடமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் தீவிரமாக இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர், கணவர் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் ஆன்லைன் ரம்மியில் மூழ்கினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் நன்றாக இருந்த விளையாட்டு, நாட்கள் ஆக ஆக தனது விபரீதத்தை காட்டத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 20 சவரன் நகை இழந்துள்ளார். பின்னர் தனது இரண்டு சகோதரிகளிடம் தலா ரூ.1.5 லட்சம் வாங்கிய பவானி, அதையும் ஆன்லைனில் ரம்மி விளையாடி தோற்றதாக தெரிகிறது. கடந்த வாரம் தனது சகோதரியிடம் இவ்வளவு பணத்தையும் நான் இழந்து விட்டேன் என சோகமாகக் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கணவன் குழந்தைகளுடன் இருந்தவர், குளித்துவிட்டு வருவதாக குளியலறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது கணவர் பாக்கியராஜ் கதவைத் தட்டியுள்ளார். எதுவும் பதில் வராததால் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது, அங்கு அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த பாக்கியராஜ், பவானியை மீட்டு உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாடி இளம்பெண் உயிரை மாய்த்துக் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.