ஆன்லைன் ரம்மி விளையாடினால் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என டிஜிபி சைலேந்திர பாபு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து சிறுவர்கள் முதல்
காவலர்கள் வரை பல பேர் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி மோசடி விளையாட்டு எனவும் யாரும் விளையாட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சமீபகாலமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டு எனும் மோசடி நடந்து வருவதாகவும்,ஆன்லைன் ரம்மி விளையாட்டு முதலில் வெற்றி பெறுவது போன்ற ஆசையை தூண்டிவிட்டு, பின்பு அனைத்து பணத்தையும் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிடித்த நடிகர்கள் ரம்மி விளையாட்டு விளம்பரங்களில் வருவதை பார்த்து ஏமாந்து
மோசடியில் சிக்க வேண்டாம் எனவும் இது ஆன்லைன் ரம்மி இல்லை, மோசடி ரம்மி
விளையாட்டு என அறிவுரை வழங்கினார்.
இதனை மீறி ஆன்லைன் ரம்மி விளையாடும் நபர்களுக்கு அவமானம், குடும்ப பிரச்சனை மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு டிஜிபி வேண்டுகோள் விடுத்தார்.








