மக்களை மையமாகக் கொண்டதாக மத்திய அரசை உருவாக்கி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதித்துறை மற்றும் பெரு நிறுவனங்களுக்கானத் துறை சார்பில், 75ம் ஆண்டு சுதந்திர தின பெருவிழா வாரம் இன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியின்போது 75ம் ஆண்டு சுதந்திர தின பெருவிழா சிறப்பு லோகோ பொறிக்கப்பட்ட 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் நாணயத்தின் சின்னத்தை அறிந்து கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
அதோடு, கல்வி, விவசாயம், தொழில், வாழ்க்கை மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காக மத்திய அரசு வழங்கும் பல்வேறு கடன் திட்டங்களை ஒருங்கிணைக்கும் Jan Samarth இணைய தளத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மக்களை மையமாகக் கொண்ட அரசை நோக்கி இந்தியா நகர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மத்திய அரசு திட்டங்களை அறிவிக்கும் பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்ததாகவும், அந்த திட்டங்களின் பயன்களைப் பெற வேண்டிய பொறுப்பு மக்களுடையாதாக இருந்தது என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால், இன்று இந்தியா அந்த பழமையான முறையில் இருந்து மாறிவிட்டதாகத் தெரிவித்தார். அந்த பழமையான நடைமுறையால் நாடு சந்தித்த துயரங்கள் ஏராளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் நாடு பல்வேறு புதிய படிகளை எடுத்து வைத்திருப்பதாகவும், புதிய பணிகளை மேற்கொள்ள முயன்று வருவதாகவும் தெரிவித்த பிரதமர், நாட்டின் வளர்ச்சிக்கும் ஏழைகள் அதிகாரம் பெறுவதற்குமான நடவடிக்கைகள் துரிப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
75ம் ஆண்டு சுதந்திர தின அம்ருத மகோத்சவம் வெறும் கொண்டாட்டமல்ல என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் வளர்ச்சிக்காக மக்களை தூண்டக்கூடியதாக அது இருக்க வேண்டும் என்றார். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் கனவுகளை அடையவும், அவற்றைக் கடந்து மேலும் முன்னேறவும் தேவையான உந்து சக்தியை மக்கள் பெற வேண்டும் என்பதே இந்த கொண்டாட்டத்தின் நோக்கம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.