29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளதால், ஆளுநர் இனியும் தாமதிக்காமல், ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : “பொள்ளாச்சி அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் சல்மான் என்ற இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு கொண்டிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டம் கடந்த காலங்களை விட மிக அதிக வேகத்தில் உயிர்களை பலிவாங்கத் தொடங்கியுள்ள நிலையில், அதை தடை செய்வதற்கான சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொள்ளாச்சி அருகிலுள்ள கிணத்துக்கடவு மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் சல்மான். இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியிருந்த சல்மான், அவர் சேமித்து வைத்திருந்த பணத்தை ஆன்லைனில் சூதாடி இழந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகும் ஆன்லைன் சூதாட்டத்திலிருந்து மீள முடியாத சல்மான், அவரது நண்பர்களிடம் கடன் வாங்கி சூதாடியிருக்கிறார். இவ்வாறாக லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சல்மான், அவரது வீட்டில் தூக்கிட்டு  உயிரை மாய்த்துக் கொண்டார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்றபட்ட சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பின்னர் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து  உயிரை மாய்த்துக் கொண்டோர் எண்ணிக்கை 35 ஆகும். கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படுவதற்கு முன்பு வரை
உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 50க்கும் அதிகம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கும் நிலையில், அதை தடை செய்வதற்கான முயற்சிகள் இன்னும் வெற்றி பெறவில்லை என்பது தான் மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக போராட்டம், பரப்புரை உள்ளிட்ட பல இயக்கங்களை பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்து வருகிறது. கடந்த ஜூன் 10ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் சென்னையில் பா.ம.க நடத்தியது. அதன் பயனாகவே, ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் என்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையை பெற்று அடுத்த 3 வாரங்களுக்குள் ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை பிறப்பித்திருக்க முடியும் என்றாலும் கூட, 109 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 26ஆம் தேதி தான் அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்பின் அக்டோபர் 1ஆம் தேதி அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டாலும் கூட, அது நடைமுறைக்கு வராமலேயே நவம்பர் 27ஆம் தேதி காலாவதியானது.

அதற்கு முன்பாக தமிழக சட்டப்பேரவையில் அக்டோபர் 18&ஆம் தேதி, அவசர சட்டத்திற்கு மாற்றாக நிரந்தர சட்டம் இயற்றப்பட்டது. அதன்பின் 53 நாட்களாகி விட்ட நிலையில் இன்று வரை ஆன்லைன் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒருபுறம் அவசர சட்டம் காலாவதியாகி விட்டது, மறுபுறம் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் ஆன்லைன் சூதாட்டங்கள் முழு வீச்சில் தொடங்கியிருக்கின்றன.

கோடிக்கணக்கில் பரிசுகளை வெல்லலாம் என்று ஆன்லைன் சூதாட்டங்களை விளம்பரங்களைச் செய்வதால் விட்டில் பூச்சிகளைப் போல மீண்டும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் கடந்த நவம்பர் 27ஆம் தேதி காலாவதியான பின்னர், 10 நாட்களில் மூவர் உயிரிழப்பு செய்து கொண்டுள்ளனர். கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளின் வேகம் அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதன் மூலமாக மட்டும் தான் ஆன்லைன் சூதாட்டத் உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய வினாக்களுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதியே தமிழக அரசு விளக்கம் அளித்து விட்டது. அதன்பிறகும் இரு வாரங்களாகிவிட்ட நிலையில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நியாயமல்ல. தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்புகளில் இருந்து தமிழக மக்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading