ஓமலூர் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தினமும் ஒரு காதல் ஜோடியாவது தஞ்சமடைந்து வருவதால், திருமண மையம் போல காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் காவல் நிலையம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என இரண்டு காவல் நிலையங்களும் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த ஒரு வாரமாக பத்துக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் வீட்டைவிட்டு ஓடிவந்து காதல் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று மதியம் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒரு காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய
விசாரணை மேற்கொண்டனர். பச்சனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகள் மோகனபிரியா. இவர் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை அறிவியல் படித்து வருகிறார். அதேபோல பக்கத்தில் உள்ள திண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் கோகுல்ராஜ். இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழியில் சென்றுவரும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்று நாமக்கல் அருகேயுள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், மகளை காணவில்லை என்று மகேந்திரன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இருவரும் இன்று மதியம் ஓமலூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, இருவரின் பெற்றோர்களையும் அழைத்துப் பேசி, சமாதானம் செய்து வந்தனர். பின்னர் காதல் ஜோடியை கோகுல்ராஜ் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஓமலூரில் உள்ள இரண்டு காவல் நிலையங்களிலும் தினமும் திருமணம் செய்துகொண்டு காதல் ஜோடி வருவதால், காவல் நிலையம் திருமணம்
மையம் போலவே காட்சியளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
-ம.பவித்ரா








