லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, எம்.எல்.ஏ.தங்கபாண்டியன், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷ்யாம் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிக்கவும்: ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்
ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரயில்வே மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதால் அடுத்த மாத இறுதிக்குள் மேம்பாலம் திறக்கப்படும். மேம்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட உள்ள சாலை பணிகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் நிறைவு பெறும்.
இதேபோல் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 விழுக்காடுக்கு மேல் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தென்காசி சாலை வரை இணைப்பு சாலை பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.
ராஜபாளையம் மட்டுமின்றி சத்தியமங்கலம், பொள்ளாச்சி ஆகிய 3 நகராட்சிகளிலும்
சொத்து வரி அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரியை குறைக்க கோரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. விரைவில் வரி குறைக்கப்படும்.
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும். பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது என்பதுதான் முதலமைச்சரின் எண்ணம். மக்களிடம் லஞ்சம் பெற வேண்டும் என்பதற்காகவே அதிகாரிகள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். எனவே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும். வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முடிவுகளை முதலமைச்சர் எடுப்பார் என கூறினார்.








