பழனி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே அதிகாரிகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் செயலைக் கண்டித்து பொதுமக்கள் கருப்புத் துணியால் தங்களது வாய் மற்றும் கண்களை மூடி கண்டனங்களை தெரிவித்தனர்.
பழனி அருகே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது கோட்டத்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்கள் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து தனது தேவைகளை கேட்டறிந்த பொதுமக்கள், கோட்டுத்துறை ஊராட்சியில் உள்ள புங்கன் ஓடை குளம் தூர்வாருவது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தை தூர்வாருவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் நிலையில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளம் தூர்வாரப்படாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தன.
மேலும் இது குறித்து பலமுறை அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்றும் கேள்வி எழுப்பினர்.பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தாஹிரா பானு மற்றும் மணிமுத்து இருவரின் தலைமையிலான அதிகாரிகள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு பாதியிலேயே வெளியேறினர்.
கூட்டம் நிறைவடையும் வரை அமர்ந்து, தங்களுக்கு முறையான பதில் அளித்துவிட்டு செல்லுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்காத அதிகாரிகள் பாதியிலேயே சென்றதால் கிராம சபை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கருப்பு துணியால் தங்களது வாய் மற்றும் கண்களை மூடியும் கருப்பு பேட் அணிந்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
பொதுமக்களை மதிக்காமல் கிராம சபை கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்துவிட்டு சென்ற அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டுமென அரசு அறிவித்துள்ள நிலையில்,கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துவிட்டு அதிகாரிகள் பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







