5 நாட்களுக்கு பிறகு கோயில்கள் திறக்கப்பட்டதால், பழனி மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில்களில் அதிகாலையில் பக்தர்கள் குவிந்தனர்.
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா நடைபெற்று வரும் சூழ்நிலையில் கடந்த 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தைப்பூசத் திருவிழாவின் 8-ஆம் நாளான இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இன்றும், நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதாலும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தரிசனம் செய்யமுடியாது என்பதாலும் அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தைப்பூசத் திருவிழாவின் கடைசி நாளான வருகிற 21-ஆம் தேதி அன்று தெப்பத்தேரோட்டமும், கொடி இறக்க நிகழ்ச்சியும் நடைபெறும் என்றாலும், அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் குவிந்தனர். 5 நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத்தை முன்னிட்டு விரதமிருந்த பக்தர்கள், காவடி சுமந்தும், அங்கப்பிரதட்சணம் செய்தும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.