மத்திய அரசின் இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயரை எழுதுவதில் கூட அலட்சியமா? தமிழ்நாயுடு என்று இருக்கும் எழுத்துபிழையை உடனடியாக திருத்த வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்த்திக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு அரசின் பெயர் தமிழ்நாயுடு என எழுத்துபிழையுடன் மத்திய அரசின் இணையபக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பாமக நிறவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அதனை உடனடியாக திருத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், டெல்லி குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை இணையவழி வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான மத்திய அரசின் இணையதளத்தில் (www.mygov.in) தமிழ்நாட்டின் பெயர் Tamil Naidu என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் பெயர் பிழையாக குறிப்பிடப்பட்டிருப்பது எழுத்துப்பிழை என்று மட்டும் கருதி கடந்து செல்ல முடியாது. அரசின் இணையதளங்கள் அரசிதழுக்கு இணையானவை. அவற்றில் சிறிய பிழை கூட நிகழ அனுமதிக்கக்கூடாது. இது உலக அரங்கில் நாட்டிற்கு அவப்பெயரைத் தேடித் தரும்.
தமிழ்நாடு பெயர் அண்மைக்காலமாக தேவையின்றி சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வரும் சூழலில், மத்திய அரசு இணையதளத்தில் தமிழ்நாட்டின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பது பல்வேறு வகையான ஐயங்களை ஏற்படுத்துகிறது. இந்த பிழை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.
http://www.mygov.in இணையதளத்தில் நடந்த இந்த பிழைக்கு அதை நிர்வகிக்கும் தேசிய தகவலியல் மையம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெயர் பிழையாக பதிவு செய்யப்பட்டதற்கு காரணமானவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.







