தமிழ்நாடு-க்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’; மத்திய அரசு இணையத்தில் எழுத்துப்பிழையால் சர்ச்சை

குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் இணைய தளத்தில் தமிழ்நாடு என்பதற்கு தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 74வது சுதந்திரம் தினம்…

குடியரசு தின விழாவில் பங்கேற்ற சிறந்த அலங்கார ஊர்தியை தேர்ந்தெடுக்கும் மத்திய அரசின் இணைய தளத்தில் தமிழ்நாடு என்பதற்கு தமிழ்நாயுடு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 74வது சுதந்திரம் தினம் கடந்த 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் எகிப்து அதிபர் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

பின்னர் நடைபெற்ற முப்படை அணிவகுப்பை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அந்த மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, அசாம், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், திரிபுரா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் அலங்கரா ஊர்திகளும், ஜம்மு காஷ்மீர், லடாக், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களின் ஊர்திகள் பங்கேற்றன.

இந்நிலையில் குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் சிறந்த ஊர்தியை தேர்ந்தெடுப்பதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மத்திய அரசின் இணைய பக்கத்தில் 17 மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. அதில் தமிழ்நாடு அரசின் பெயரானது எழுத்துபிழையுடன் காணப்பட்டது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தமிழ்நாயுடு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கேரள மாநிலத்தின் பெயரும் ஆங்கிலத்தில் கேரிலா என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடரும் பெயர் சர்ச்சை

தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று சொல்லலாம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி குறிப்பிட்டார், அதைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழாவுக்கான தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்று குறிப்பிட்டதும் தமிழகத்தின் இலட்சினை இடம் பெறாததும் சர்ச்சையானது. அந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்தார். பல்வேறு எதிர்க்கட்சிகளும் நிகழ்வைப் புறக்கணித்தன. பின்னர் தமிழ்நாடு என்று குறிப்பிடாதது ஏன் என்பது பற்றி ஒரு விளக்கத்தையும் ஆளுநர் ஆர்.என். ரவி  அளித்தார். அதைத்தொடர்ந்து குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பிதழில்,  தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  தமிழக அரசு லட்சினையும் அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது. இதனால் பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் இணையதள பக்கத்தில்  “தமிழ்நாடு” என்பதற்கு பதிலாக “தமிழ்நாயுடு: என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.