வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகள் நியமனம்

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் முன்னதாகவே முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க 10 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருச்சிக்கு ஜெயகாந்தன், ஈரோட்டுக்கு பிரபாகர், வேலூருக்கு நந்தகுமார், ராணிப்பேட்டைக்கு செல்வராஜ்,  நாகைக்கு பாஸ்கரன், மதுரைக்கு வெங்கடேசன், அரியலூர் மற்றும் பெரம்பலூருக்கு அனில் மேஷராம், கடலூருக்கு அருண் ராய் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் மாநில அளவிலான பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் இந்த அதிகாரிகள் செயல்படுவர்.

ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியை நாள்தோறும் மின்னஞ்சல் மூலம் அறிக்கை அனுப்ப தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகளை ஒருங்கிணைக்க அமுதா, கோபால், கார்த்திகேயன் ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டம் வாரியாக 36 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் 10 கூடுதல் அதிகாரிகளை நியமித்து பருவமழையை எதிர்கொள்கிறது தமிழ்நாடு அரசு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.