சென்னை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தண்ணீர் குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மற்றும் பொறியாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்திர தோபா(36). இவர் சென்னை வடபழனியில் தங்கி கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முந்தினம் வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் தண்ணீர் குழாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்து தேவேந்திர தோபா சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார்.
பின்னர் படுகாயமடைந்த தேவந்திராவை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் தேவேந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரர் தீபக் குமார் சோனி மற்றும் பொறியாளர் கருப்பசாமி ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.








