நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விசிக மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல் முன்னிலையில் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் நிகரென கொள்வோம் என்ற பாலின சமத்துவ உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.
இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின பாகுபாடுக்கு எதிராக நிகரென கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை வழங்கவேண்டும் என்ற கையெழுத்து இயக்கத்தையும் நியூஸ் 7 தமிழ் தொடங்கியுள்ளது. இதில் மாணவர்களும், ஆசிரியர்களும் கையப்பமிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.









