சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள்
வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்
தியாகராஜன் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், அரசியல்வாதிகளுக்கும், அரசுக்கும் மனிதநேயமும், செயல்திறனும் தான் மிக முக்கியம் என குறிப்பிட்டார்.
இலவச திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கிறதா என பெரிய விவாதங்கள் நடக்கிறது.
அந்த விவாதங்களுக்கு அப்பால், முக்கியமானது செயல்திறன் தான்.
அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கு சென்று சேர்கிறதா
என்பதே முக்கியம் என தெரிவித்தார்.
பொருளாதாரம், சட்டம், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சிறந்த மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிப்பதாக என குறிப்பிட்ட அவர், நல்ல கருத்துக்களை, மனிதநேயமிக்க அறிவுரைகளை யார் சொன்னாலும் முதல் அரசாக ஏற்போம். ஆனால், சர்வாதிகாரமாக நாங்கள் சொல்வதை தான் பின்பற்ற வேண்டும் எனும் அடிப்படையில் சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம் என தெரிவித்தார்.







