அதிமுகவில் இணைய வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் அழைப்புக்கு டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அதிமுக வில் கடந்த ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாததாக மாறியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.
இதனிடையே இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என எடப்பாடி பழனிசாமி, சசிகலா, டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்த இபிஎஸ், அவர் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், “தீயசக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே” என்று இபிஎஸ் தரப்பை சாடியுள்ளார்.








