நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். நியூஸ்7…

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.

நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.  இவர் நேற்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போதும், மற்ற நேரங்களில் மர்ம நபர்கள் சிலர் நோட்டம் விட்டுள்ளனர். இவரைப் பற்றிய தகவல்களையும் விசாரித்துள்ளனர்.

தன்னை நோட்டம் விடும் மர்ம நபர்கள் குறித்து காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் கூறிய நேசபிரபுவிடம், நேரில் வந்து புகார் அளிக்கும்படியும், போதிய காவலர்கள் இல்லை என்றும் அலட்சியம் காட்டியுள்ளனர்.

இதையும் படியுங்கள் ; நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவுக்கு அறுவை சிகிச்சை நிறைவு – ICUக்கு மாற்றம்!

இதையடுத்து மீண்டும் மர்ம நபர்கள் பின்தொடர பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் மீண்டும் காவல்துறையினரின் உதவியை நேசபிரபு கேட்டுள்ளார். அவ்வாறு காவல்துறையினரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம கும்பல் நேசபிரபுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதனால் கை, கால், முகம் என உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவை, தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் நேசபிரபு தாக்கப்பட்டதை அறிந்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் மெத்தனப்போக்கில் செயல்பட்ட காவல்துறையினர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அனைத்து செய்தியாளர்கள் மற்றும் நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிர்வாக ஆசிரியர் தியாகசெம்மல் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என நிர்வாக ஆசிரியர் தியாகச் செம்மல் வலியுறுத்தினார்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சூலூர் பகுதி நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டு படுகாயங்களுடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அவர் சகோதரரிடம் வழங்கினார். இதில் ஆறு நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.