நெல்லை – தென்காசி அரிவாள் வெட்டு சம்பவம் – மேலும் ஒருவர் சுட்டுப் பிடிப்பு!

பொதுமக்கள் மீது அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருநெல்வேலி, தென்காசியில் இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து சென்ற ஒரு கும்பல் கண்ணில் பட்டவர்கள் மீது அரிவாளால் வெட்டினர். கடந்த மே 28 ஆம் தேதி பிரம்மதேசம் பகுதியில், மர்ம கும்பல் ஒன்று அங்கு இருந்தவரை பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். அதன்பிறகு, வாகைக்குளம் பகுதியில் உள்ள சிற்பக்கலை தொழிற்கூடத்துக்குள் சென்ற அந்தக் கும்பல் அங்கிருந்த ஊழியரின் கைப்பேசியைப் பறித்துச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, மே 29 ஆம் தேதி மாலை தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் பகுதிக்கு சென்ற அதே கும்பல், முன்விரோதம் காரணமாக அங்கு நடைபெற்ற திருமண விழாவில் புகுந்து கண்ணில் பட்டவர்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்துத் தப்பிச் சென்றபோது, திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டியில் அதிவேகமாக பைக்கில் சென்றனர். அதனைத் தட்டிக் கேட்ட ஒருவரை அந்தக் கும்பல் அரிவாளால் தாக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய திருநெல்வேலி, தென்காசி மாவட்ட காவல் துறையினர் சார்பில் ஒருங்கிணைந்த தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருமாவட்ட காவல் துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த சம்பவங்களில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உள்பட 8 பேரை காவல் துறையினர் சனிக்கிழமை (மே 30) கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த நெட்டூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரை தனிப்படைக் காவலர்கள் சுட்டுப்பிடித்தனர். ஐயப்பன் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதால் காவல் துறையினர் தற்காப்புக்காக அவரைச் சுட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் காவல் துறையினரும் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.