“தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை பெற வேண்டும். நான் 3வது முறை பிரதமராக வேண்டும் என்பதற்காக இதை கேட்கவில்லை” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2 நாட்கள் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த தேசிய செயற்குழு கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் மாநிலங்களை ஆளும் பாஜக முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், மாநில, மாவட்டத் தலைவர்கள், பல்வேறு அணிப் பிரிவுகளின் தலைவர்கள், தேசிய செயற்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்ததாவது..
” நாடாளுமன்றத்திற்கான பணிகள் துவங்கி விட்டன. பிரச்சாரத்தின் போது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் நாம் சென்றடைய வேண்டும். அனைவரின் நம்பிக்கையையும் பா.ஜ.க அரசு பெற வேண்டும். பாஜக 24 மணி நேரமும் நாட்டிற்கு சேவை செய்கிறது. அடுத்த 100 நாட்கள் புதிய உற்சாகத்துடனும் புதிய நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும்
இன்று தேதி 18, இந்த காலகட்டத்தில் 18 ஆண்டுகள் என்ற மைல்கல்லை எட்டிய இளைஞர்கள் நாட்டின் 18வது மக்களவையை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். நாட்டின் கனவும் தீர்மானமும் பெரியது. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பதும், அடுத்த 5 ஆண்டுகள் அதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதும் பா.ஜ.க.வின் கனவும் தீர்மானமும் ஆகும். அடுத்த 5 ஆண்டுகளில், நாம் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி ஒரு மாபெரும் முயற்சியை எடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையையும் பெற வேண்டும்.
அனைவரின் முயற்சியும் நடந்தால், நாட்டிற்கு சேவை செய்ய அதிகபட்ச இடங்களை பா.ஜ.க பெறும். இந்த இரண்டு நாட்களில் நடந்த விவாதங்கள். நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான நமது உறுதியை வலுப்படுத்தும் விஷயங்கள் ஆகும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை 400 இடங்களிலும், பா.ஜ.க.வை 370 இடங்களிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். நான் மூன்றாவது முறையாக ஆட்சியை அனுபவிக்க இதை கேட்கவில்லை.
எனது வீட்டை நினைத்திருந்தால் நான் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு வீடு கட்டியிருக்க மாட்டேன். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே நான் வாழ்கிறேன் மேலும் கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் கனவுகளை நிறைவேற்றுபதுதான் எனது தீர்மானம். பாஜகவின் அனைத்து முக்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டதாக பொதுமக்கள் கூறி வருகிறார்கள். பா.ஜ.க.வின் முழு உழைப்பையும் நாடு நம்புகிறது. களங்கமற்ற 10 வருட பதவிக் காலம் மற்றும் 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து வெளியேற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல
இன்று ஒவ்வொரு துறையிலும் இந்தியா அடைந்துள்ள உயரங்கள், ஒவ்வொரு நாட்டினரையும் மிகுந்த உறுதியுடன் ஒன்றிணைத்துள்ளது. இது வளர்ந்த இந்தியாவின் தீர்மானம். இப்போது நாடு சிறிய கனவுகளைக் காணவோ அல்லது சிறிய தீர்மானங்களை எடுக்கவோ முடியாது. கனவுகளும் பெரியதாக இருக்கும், தீர்மானங்களும் பெரியதாக இருக்கும்.இந்தியாவை நாம் வளர்க்க வேண்டும் என்பது நமது கனவும் தீர்மானமும் ஆகும்
கோடிக்கணக்கான பெண்கள், ஏழைகள், இளைஞர்களின் கனவுகள்தான் மோடியின் கனவு.
எதிர்க்கட்சிகள் பல தவறான கூற்றுக்களை கூறுகின்றன. ஆனால், இந்தியாவை வளர்ச்சியடையச் செய்வோம் என்ற ஒரு வாக்குறுதியை வழங்குவதில் எச்சரிக்கையாக இருக்கிறது. பா.ஜ.க.வால் மட்டுமே வளர்ச்சி என்ற வாக்குறுதியை அளிக்க முடியும். கடந்த 10 ஆண்டுகளில் பல வரலாற்று மற்றும் துணிச்சலான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் பல கால பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளது பா.ஜ.க அரசு. குறிப்பாக அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் ஐந்து நூற்றாண்டுகளின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, நாடு அதன் புதிய கல்விக் கொள்கையைப் பெற்றது மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தலாக் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2014ல் நான் பதவியேற்றபோது, மோடிக்கு மாநிலத்திற்கு வெளியே என்ன அனுபவம் உள்ளது என பலர் விமர்சனம் செய்தனர். வெளியுறவுக் கொள்கை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டன. சமீபத்தில் நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் சென்றேன். உலகம் பல நாடுகளுடனான உறவுகள் வலுவாக இருப்பதைப் பார்த்தேன் வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் போன்றவற்றில் நமது உறவுகள் சிறப்பாக உள்ளன. ஐக்கிய அரபு நாடுகள் தங்கள் நாட்டின் உயரிய கவுரவத்தை எனக்கு அளித்தன, இது பிரதமர் மோடியின் கவுரவம் அல்ல, ஒட்டுமொத்த மக்களின் மரியாதை” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.







