சென்னை தீவுத் திடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜயகாந்த்தின் உடலுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தி நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
”எங்களுடைய விடுதலைப்புலிகள் தலைவர் மீதான பற்றின் காரணமாக, நம்முடைய கேப்டன் அவரது 100வது படத்திற்கு ‘கேப்டன் பிரபாகரன்’ என்று பெயரிட்டார். அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அன்றில் இருந்து தனது ரசிகர்களால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களாளும் கேப்டன் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் அவர்.
அவர் ஒரு சிறந்த போராளி என்பதற்கு சான்று, ஈழத்தில் தமிழர்களுக்காக பெரும் படையை திரட்டி அவர் நடத்திய போராட்டமாக இருக்கட்டும், காவிரி நதிநீர் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட போது, தன் தலைமையில் மிகப்பெரிய திரையுலக படையை திரட்டி நடத்தப்பட்ட போராட்டமாக இருக்கட்டும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அவர் போர் குணத்திற்கு என்னற்ற சான்றுகள் உண்டு. அவர் பசியை உணர்ந்தவர். பட்டினி கிடந்தவர். ஆனால் அவரால் பசியாற்றப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள்.
அவர் அதிகம் படிக்கவில்லை. ஆனால் அவரால் படித்து மேன்மையடைந்த மக்கள் ஏராளம். அவர் நம்மோடு இல்லை என்பதை என் மனம் மறுக்கிறது. எப்படி பார்த்தாலும், மனதில் ஆறுதல் சொல்லி தேற்றிக்கொள்ள முடியவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இல்லாதபோது கட்சி ஆரம்பிப்பது சாதாரணம். ஆனால் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே கட்சி ஆரம்பித்து அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் கேப்டன். ஒரு மாற்றத்திற்கான அரசியலை கொண்டுவர முயன்றவர் கேப்டன். தனித்து நின்ற ஒரு பெரும் போர் வீரர். அந்த துணிவு யார்க்கும் இருக்க வாய்ப்பு இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.