அறிவுக்களஞ்சியம் என்றழைக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு கல்வி உலகுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கல்வியாளர் அனந்தகிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், வாணியம்பாடியில் பிறந்து தரணி போற்றும் வகையில் மாணவ சமூகத்தின் கலங்கரை விளக்கமாக அனந்தகிருஷ்ணன் திகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் என்றும், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் போற்றப்பட்ட தலைசிறந்த கல்வியாளர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
அனந்தகிருஷ்ணன் இறப்பால் வாடும் குடும்பத்தினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் கூறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல்
முனைவர் அனந்தகிருஷ்ணன் மறைவு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யலாம் என, அரசுக்கு பரிந்துரைத்ததுடன், பொறியியலில் ஒற்றைச் சாளர முறையை கடந்த காலத்தில் அறிமுகம் செய்த பெருமை கொண்டவர். சமூகநீதி கொள்கைகளை ஆதரித்த அனந்த கிருஷ்ணனின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.







