பரமக்குடி சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
பரமக்குடி அருகே உள்ள அரியநேந்தல், உரப்புளி, கள்ளிக்கோட்டை, புதுக்குடி, வல்லம், நயினார்கோயில் உள்ளிட்ட 42 கிராமங்களில் உள்ள அம்மன் கோயில்களில் முளைப்பாரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் கிராமங்களில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் முளைப்பாரி திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் பரமக்குடி சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த வாரம் முத்து பரத்தல் நிகழ்ச்சி தொடங்கி விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்தல் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மழை பெய்யவும் நாடு நலம் பெறவும் கிராமம் விவசாயம் செழிக்கவும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலுடன் அவர் அவர்களின் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியினை எடுத்து ஊர்வலமாகக் கொண்டு வந்து அந்தந்த கிராமங்களில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் வைத்து பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் கோலாகலமாக கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து விரதம் இருந்து வளர்த்த முளைப்பாரியை கரைக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு கிராமங்கள்தோறும் இரவு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன.
—-ரூபி.காமராஜ்







