மதுரையின் முக்கிய சாலைகள் மிகமோசமான நிலையில் உள்ளதாகவும், காற்று மாசின் அளவும் அதிகமாக உள்ளதாகவும் எனவே தமிழக அரசு மதுரைக்கு அவசர சிறப்புநிதி வழங்கி, சாலைகளை செப்பனிட்டு, காற்று மாசினை குறைக்க வேண்டுமென மதுரை எம்.பி சு.வெங்கடேசன் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மதுரை மாநகராட்சியில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாமல் மக்களை சொல்லொணாத் துயரில் ஆழ்த்தி வருகின்றன. குறிப்பாக, அதிக போக்குவரத்து இருக்கும் நகரின் மையப்பகுதி, 2011-ல் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நகரின் வடக்குப் பகுதியில் உள்ள சுமார் 15 வார்டுகள் முழுவதும் களிமண் பூமியாக இருப்பதாலும், பல ஆண்டுகளாக மண் சாலைகள் கூட அமைக்கப்படாததாலும், தற்போதைய பாதாள சாக்கடைப் பணிகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அங்கு இதற்கு அடுத்து நடைபெறவுள்ள குடிநீர் திட்டப் பணிகள் முடிந்த பிறகுதான் புதிய சாலை அமைக்க இயலும் எனத் தெரிகிறது. எனவே, மேற்கண்ட இடங்கள் தொடர்பாகப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
மதுரையின்
முக்கியசாலைகள் மிகமோசமான நிலையில் உள்ளன.காற்றுமாசின் அளவு அதிகமாக உள்ளது.
தமிழக அரசு மதுரைக்கு அவசர சிறப்புநிதி வழங்கி, சாலைகளை செப்பனிட்டு, காற்றுமாசினை குறைக்க வேண்டுகிறேன். @CMOTamilnadu pic.twitter.com/6LsqTIPpp5
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 11, 2021
நகரின் மையப்பகுதி மற்றும் பிற பிரதான சாலைகளை உடனடியாக தேசிய நெடுஞ்சாலை (MORTH) தர நிலை அடிப்படையில், சிறந்த தரத்துடன் நடையாளர்களுக்கான குறியீடுகள், பிரதிபலிப்பான்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான சாலைப் பாதுகாப்புக் கட்டமைப்புகளுடன் உடனடியாகச் சீரமைக்கவும், நகரின் வடபகுதியில் இதுவரை சாலைகள் அமைக்கப்படாத இடங்களில் தற்காலிக சீரமைப்புப் பணி மேற்கொண்டு மக்களின் இன்னலைப் போக்கவும், சுமார் ரூ.60 கோடி அவசர சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே, சுமார் ரூ.500 கோடி அளவுக்கு நிதி பற்றாக்குறையில் இருப்பதாக கூறப்படும் மதுரை மாநகராட்சியால் இப்பணிகளுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய இயலாத நிலை உள்ளது. இதனால் மக்கள் கடும் துயரத்துக்கு உள்ளாகிறார்கள்.
மேலும், மதுரையில் காற்று மாசு அதிகம் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கண்டறிப்பட்டு (PM 10 – 68 ug/m3 ; Air quality – Good – 22 days per year, Satisfactory – 237 days per year, Moderate – 10 days in total observed 269 days) தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், 15-வது நிதிக் குழுவின் அடுத்த சிறப்பு நிதி மேற்படி காற்று மாசைக் குறைத்தால் மட்டுமே மதுரை மாநகராட்சிக்கு வழங்கப்படக்கூடிய நிலை உள்ளது. எனவே, மக்களின் நலன் கருதியும் ஏற்கெனவே நிதி பற்றாக்குறையில் இருக்கக்கூடிய மாநகராட்சிக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய நிதி எவ்வித இழப்பும் இன்றி முழுமையாகக் கிடைத்திட வழிவகை செய்திடவும் கேட்டுக்கொள்கிறேன்.” என வெங்கடேசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.