நிலக்கரி பற்றாக்குறை; அமைச்சர்களுடன் அமித்ஷா ஆலோசனை

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை சிக்கல் மேலெழுந்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று சந்தித்துள்ளார். கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை…

இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை சிக்கல் மேலெழுந்ததையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று சந்தித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நிலக்கரி பற்றாக்குறையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இப்பிரச்னை தீவிரமாக மேலெழுந்ததையடுத்து நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக தேவையற்ற பீதி உருவாக்கப்படுகிறது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கான நிலக்கரி தட்டுப்பாடு இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

நிலக்கரி பற்றாக்குறையால் தற்போது ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் மின்வெட்டு நிலவிவருகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மின்சாரத் தேவையை அனல் மின்நிலையங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. இந்நிலையில் அனல் மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிகளை வழங்கும் சுரங்கங்கள் உள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் மற்றும் மழை காரணமாக நிலக்கரியை வெட்டியெடுக்கும் பணியில் தொடர் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில், மத்திய மின் மற்றும் நிலக்கரி துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்களை இன்று அமித்ஷா சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கூட்டத்தில் NTPC அதிகாரிகளும் பங்கேற்றனர். இதில் மாநிலங்களுக்கு தேவையான நிலக்கரி விநியோகத்தினை உறுதிப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முன்னதாக நம்மிடம் போதுமான அளவில் எரிபொருள் உள்ளது. இதனைக்கொண்டு நாடு முழுவதும் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.