2014ஆம் ஆண்டுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி ஏழை மக்களின் திட்டங்களுக்கான பணத்தை கொள்ளையடிததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசின் பதவி காலம் வரும் மே 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் கர்நாடக சட்டசபைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள், கர்நாடக மாநிலத்திற்கு அவ்வப்போது வருகை தந்து, அரசியல் தொடர்பாக சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதோடு, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, அடிக்கல் நாட்டுவது என்று பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்கனவே புதிய விமான நிலையம் திறப்பு, சாலை பாதுகாப்பு திட்டங்கள் தொடங்கி வைப்பது என்று 4 முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது 5-வது முறையாக கர்நாடக மாநிலம் மாண்டியாவிற்கு வருகை தந்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கர்நாடக மாநிலம், மாண்டியாவிற்கு, வருகை தந்த அவருக்கு தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். காரை விட்டு இறங்கிய மோடி, அந்த இடத்திலேயே நின்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்று கொண்டார்.தொண்டர்களும் மலர்களை தூவி தங்களது அளவு கடந்த அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு – மைசூரு விரைவு சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த சில நாட்களாக பெங்களூரு-மைசூரு விரைவு சாலையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்றும், நமது தேசத்தின் வளர்ச்சியைக் கண்டு இளைஞர்கள் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற பெங்களூருவையும், பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற மைசூருவையும் இணைப்பது மிகவும் முக்கியமானது எனவும் கூறினார். கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு 3 கோடி பேருக்கு வீடு கட்டி தந்துள்ளதாகவும், அதில் கர்நாடகாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனை தொடர்ந்து விமானம் மூலம் தார்வாட் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் ஐ.ஐ.டி பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதால், 200-க்கு மேல் உணவு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த வருகையையொட்டி கர்நாடக மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா