மயான பூமி செயல்பாடுகளுக்காக தனி செயலி உருவாக்கப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா மயான பூமிகளின் சேவைகளை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில் மேயர் பிரியா தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மயான பூமியில் பொதுமக்களுக்கு இலவச சேவையை உறுதிப்படுத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மயான பூமியின் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் அறிவிப்பு பலகைகளை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உத்தரவிட்டார்.
சென்னையில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 209 மயான பூமிகள் உள்ளன. மயான பூமியில் சாலை வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் கழிப்பறைகளை தூய்மையாக பராமரித்து, சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்க அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் மயான பூமியில் இரவு நேர பாதுகாவலரை நியமித்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு சென்னை மேயர் உத்தரவிட்டார்.
மேலும் மயான பூமியின் வளாகத்தில் மரக்கன்று நடுதல், நீரூற்று அமைத்தல் போன்ற பணிகளை முடித்து ஒரு மாத காலத்திற்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், சென்னை மாநகராட்சியின் இலவச மயான பூமியில் பொதுமக்களிடம் கட்டணம் பெறுவதில் முறையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை எனவும் , மயான பூமி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் மேயர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அலுவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பிறப்பித்துள்ளார் .
– யாழன்