அமைதி பேச்சுவார்த்தை ; பாகிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை ஜனாதிபதி…!

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் எதிரொலியாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடக்கியுள்ளது.

இதற்கிடையே ஈரான் – அமெரிக்கா இரு தரப்பிலும் 2 வாரங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு அமைதி பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானை மத்தியஸ்தராக கொண்டு நடைபெறும் இந்த அமைதி பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழுவும், ஈரான் தரப்பில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவும் இஸ்லாமாபாத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அமெரிக்கா தரப்பில் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் பாகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார் மற்றும் உள்துறை அமைச்சர் சையத் மொஹ்சின் ரஸா நக்வி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.