முதியோர் உதவித் தொகை, ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு செய்துதரப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி… அதிமுக சார்பில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி களம் இறங்கியுள்ள நிலையில், இந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாகவே செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிரச்சார வாகனங்களில் மட்டுமின்றி நடந்தும், இருசக்கர வாகனத்தில் சென்றும் வாக்கு சேகரிக்கும் ராஜேந்திர பாலாஜி, அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தார்.
ராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட செட்டியார்பட்டி கிராமத்தில், வாக்கு சேகரிக்கச் சென்ற ராஜேந்திர பாலாஜியை பொதுமக்கள் கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்றனர். செட்டியார்பட்டி மக்களுக்கு தனியாக முகாம் அமைத்து, முதியோர் உதவித் தொகை, ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்க ஏற்பாடு, உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மேலும், சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பணிகளை, விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த ராஜேந்திர பாலாஜி, அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.







