எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக…

எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் முத்தமிழ்ச்செல்வி, சிறு வயது முதலே மலையேற்றத்தில் ஆர்வம் மிக்கவராக இருந்துள்ளார். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பிய இவர், அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைய அதிக நிதி தேவைப்பட்டதால், தமிழ்நாடு அரசிடம் நிதியுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.15 லட்சமும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் முத்தமிழ்ச்செல்விக்கு வழங்கினர்.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட முத்தமிழ்ச்செல்வி, ஏப்ரல் 5 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறத் தொடங்கினார். 51 நாட்கள் தொடர்ந்து பயணித்த அவர், கடந்த மே 23 ஆம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். ஏறத்தாழ 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தொடர்ந்து சாதனை மங்கை முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “எவரஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல. தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சியை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரி முத்தமிழ்ச்செல்வி. அவரது பயணத்துக்கு அரசு & தனியார் பங்களிப்புடன் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நிலையில், தமிழ்நாட்டிலிருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பியுள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ்ச்செல்விக்கு வாழ்த்துகள். அவரது சாதனை பயணங்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும்” என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.